செய்திகள்
பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல் இல்லாத நல்லாட்சி வேண்டும்- ஜவடேகர்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல் இல்லாத நல்லாட்சி அவசியம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்டு சமூக-பொருளாதார சிக்கல்களைக் கையாளும் இந்தியாவின் முன்னணி அமைப்பாக ஸ்கோச் குரூப் உள்ளது. இதன் 60-வது மாநாடு புது டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
பொருளாதார வளர்ச்சிக்கு நல்லாட்சி மற்றும் ஊழல் அற்ற ஆட்சி அவசியம். நல்லாட்சி என்பது நல்ல பொருளாதாரத்தின் அடிப்படையாகும். ஊழல் இல்லாமை மற்றும் குறைந்த பணவீக்கம் ஆகியவை எந்தவொரு நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இரண்டு முக்கிய கருவிகள் ஆகும்.
அடுத்து வரும் 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். கொள்கை முடக்கம் ஒருபோதும் நிலையான வளர்ச்சியை தராது. மறுபுறம் தீர்க்கமான தலைமை பொருளாதாரத்திற்கு உண்மையான ஆதரவையும் வேகத்தையும் தருகிறது. அவ்வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பணியை சிறப்பாக செய்கிறார்.
ஜிஎஸ்டியின் ஒரு பெரிய புரட்சிகர நடவடிக்கை வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும் வரி இணக்கத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டது.
நாம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும். 40 சதவீத மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. விவசாய கடன்களை அதிகரிக்கவும் வளர்ச்சியை அதிகரிக்கவும், அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.