செய்திகள்
நாணயங்கள் தேக்கம்

திருப்பதி கோவிலில் ரூ.14 கோடி நாணயங்கள் தேக்கம்

Published On 2019-08-17 05:20 GMT   |   Update On 2019-08-17 06:37 GMT
திருப்பதி கோவிலில் பல ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் மாற்றப்படாததால், தேவஸ்தானத்திடம் மட்டும் ரூ.14 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள் தேங்கியுள்ளன.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானை தரிசித்து செல்லும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர்.

காணிக்கைகளில் சில்லறை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி நகைகள் என பிரித்து கணக்கிட்டு வங்கிகளில் தேவஸ்தானம் வரவு வைக்கிறது.

இதில் தினசரி உண்டியலில் இருந்து சேகரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மட்டும் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு மூலமாக எண்ணப்படுகிறது. இப்பணியில் தற்போது அரசு, தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதை சேவையாக எண்ணி அவர்கள் செய்து வருகின்றனர்.


அதேசமயம், சில்லறை நாணயங்கள் மொத்தமாக மூட்டைகளாகக் கட்டப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு கொண்டு சென்று அங்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தேவஸ்தான ஊழியர்கள் கணக்கிட்டு மூட்டைகளாகக் கட்டி பத்திரப்படுத்துகின்றனர்.

இதுவரை சில்லறை நாணயங்களை ஏற்று வந்த வங்கிகள் அவற்றை கொண்டு செல்லவும், நிலுவையில் வைக்கவும் போதிய இடமில்லை என்று கூறி சில்லறை நாணயங்களை ஏற்க மறுப்பு தெரிவித்து வந்தன.

இதன் காரணமாக, பல ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் மாற்றப்படாததால், தேவஸ்தானத்திடம் மட்டும் ரூ.14 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள் தேங்கியுள்ளன.

இந்நிலையில் இருப்பில் உள்ள சில்லறை நாணயங்களை வங்கிகளில் சேர்க்க தேவஸ்தானம் புதிய யுக்தியை கையாண்டுள்ளது. அண்மையில் தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ள தர்மாரெட்டி, சில்லறை நாணயங்களை எந்த வங்கி ஏற்றுக் கொள்கிறதோ? அதே அளவிற்கு அந்த வங்கியில் தேவஸ்தானம் சார்பில் பணம் முதலீடு செய்யும் என்று அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தேவஸ்தானத்தின் இருப்பில் உள்ள சில்லறை நாணயங்களை பெற்றுக்கொள்ள வங்கிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News