செய்திகள்
டெல்லி-லாகூர் இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் துண்டித்தது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் சம்ஜவுதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்திய திரைப்படங்கள் எதுவும் இனி திரையிடப்படாது எனவும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை நிறுத்துவதாக அந்நாடு மத்திய தகவல் தொடர்பு மந்திரி முராத் சயீத் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தெரிவித்தார்.
இந்நிலையில், புதுடெல்லியில் இருந்து லாகூர் வரை இயக்கப்படும் பஸ் சேவையை நிறுத்துவதாக டெல்லி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பஸ் போக்குவரத்து 1999-ம் ஆண்டு அப்போதய பிரதமர் அட்டல் வாஜ்பாயால் தொடங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.