செய்திகள்
மிக்கா சிங்

பாகிஸ்தான் கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இந்திய பாடகருக்கு வசைமழை

Published On 2019-08-11 12:05 GMT   |   Update On 2019-08-11 12:05 GMT
இந்தியாவுடனான உறவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளபோது முஷரப்பின் மிக நெருங்கிய நண்பரான பிரபல கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இந்திய பாடகருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்லாமாபாத்:

இந்தி படங்களில் பின்னணி பாடியும் பல்வேறு இசை ஆல்பம் தொகுப்புகளில் பாடியும் பிரபலம் ஆனவர் தலேர் மெஹந்தி. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரது தம்பி மிக்கா சிங். இவரும் பிரபல பாடகர். பங்காரா, ராப், பாப் இசை பாடல்கள் அதிகம் பாடும் இவர் பலமுறை செக்ஸ் புகார்களில் சிக்கியுள்ளார்.



இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான உறவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளபோது 8-8-2019 அன்று கராச்சி நகரில் முஷரப்பின் மிக நெருங்கிய நண்பரான பிரபல கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இந்திய பாடகர் மிக்கா சிங்குக்கு இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களிடமிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சினிமாக்கள் வெளியிட தடை, கலைஞர்களுக்கு தடை, வர்த்தக உறவுகளுக்கு தடை என இருநாடுகளுக்கு இடையில் சச்சரவு வலுத்துவரும் நிலையில், மணமகளின் விருப்பப்படி இந்த இசை நிகழ்ச்சியை நடத்த பாகிஸ்தானுக்கு வருவதற்காக மிக்கா சிங் மற்றும் அவரது இசை குழுவை சேர்ந்த 14 பேருக்கு விசா வழங்கியது யார்?

ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தாலும் தற்போதையை சூழலில் விசாக்களை ரத்து செய்திருக்க வேண்டாமா? என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சையத் குர்ஷித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல், தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு அற்பப்பணத்துக்காக பாகிஸ்தானுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தியதற்காக இந்தியாவில் உள்ள மிக்கா சிங் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வசைமாரி பொழிந்து வருகின்றனர்.

கராச்சி இசை நிகழ்ச்சிக்காக மிக்கா சிங் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Tags:    

Similar News