செய்திகள்
கர்நாடகாவில் தொடரும் கனமழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு
கர்நாடக மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில், “மீட்புப்பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. நிவாரணப்பணிகளை செயல்படுத்துவதே அரசின் தலையாய கடமையாகும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் நிலைமையை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை. மத்திய அரசும் நிலைமையை கவனித்து வருகிறார்” என தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் உதவித்தொகை வழக்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தவாங்கரே மாவட்டத்தின் பெரும்பாலான முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரனஹள்ளியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தக்சினா மாவட்டத்தின் பெரும்பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள முன்னாள் மந்திரி ஒருவரின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. பின்பு பாதுகாப்பு படையினர் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். கடந்த 6 மணி நேரத்தில் மீட்புப்படையினரும் , தன்னார்வலர்களும் படகுகள் மூலம் 270 நபர்கள் மற்றும் 43 கால்நடைகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.