செய்திகள்
கேரளாவில் கனமழைக்கான ரெட் அலர்ட்- இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகள் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.