செய்திகள்
கொலை

பீகாரில் பள்ளி வகுப்பறையில் மாணவர் குத்திக்கொலை

Published On 2019-08-02 09:40 GMT   |   Update On 2019-08-02 09:40 GMT
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசாபர்பூர்:

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள படாஜகநாத் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்ராம். இவரது மகன் சூரஜ்குமார் (14). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று மதியம் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் சூரஜ்குமார் இருந்த வகுப்பறைக்குள் புகுந்தார். சூரஜ்குமாருடன் கைகலப்பில் ஈடுபட்ட அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளால் சூரஜ்குமாரை சரமாரியாக வெட்டினார்.

வகுப்பறையில் 40 மாணவர்கள் கண் முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தால் அவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனே வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சூரஜ்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சூரஜ்குமாரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். நேற்று முன்தினம் சூரஜ்குமார், அவரது தாயாருடன் நடந்து சென்ற போது 2 வாலிபர்கள் அவரது தாயின் கைப்பையை பறிக்க முயன்றுள்ளனர். இதை சூரஜ்குமார் தடுத்ததாகவும், இதனால் ஆவேசம் அடைந்த வாலிபர்கள் சூரஜ்குமாரை மிரட்டியதும் தெரிய வந்தது.

இதில் சம்பந்தப்பட்ட ஒருவர்தான் சூரஜ்குமாரை குத்திக்கொலை செய்திருப்பதை கண்டு பிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News