செய்திகள்
வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சி

காரை பார்க் செய்துவிட்டு வீட்டின் கதவை மூடுவதற்குள் துப்பாக்கி முனையில் கொள்ளை

Published On 2019-07-01 09:40 GMT   |   Update On 2019-07-01 09:40 GMT
டெல்லியில் காரை பார்க் செய்துவிட்டு, வீட்டின் கதவை மூடுவதற்குள், மர்ம நபர்கள் திடீரென உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.
புது டெல்லி:

டெல்லியைச் சேர்ந்தவர் வருண் பால். இவர் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.

காரை வீட்டின் முன்பு உள்ள வராண்டாவில் பார்க் செய்துவிட்டு, வருண் மட்டும் காரில் இருந்து இறங்கி கதவினை மூடச் சென்றுள்ளார். அதற்குள் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வாசலில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியுடன் வருணின் வீட்டினுள் நுழைந்தனர். வருணிடம் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். வருணும் பயந்துப்போய் அனைத்தையும் கொடுத்துள்ளார்.

அவரது மனைவி காரில் இருந்தபடியே செல்போனில் போலீசருக்கு தகவல் கொடுக்க முற்பட்டுள்ளார். அதற்குள் மர்ம நபர்களுள் ஒருவர் அவரை நெருங்கி அவரிடம் இருந்த பணம், நகை ஆகியவற்றை பறித்துள்ளார்.



இவை அனைத்தும் வீட்டு வராண்டாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் வீடியோவாக பதிவாகியிருக்கிறது.

இதனையடுத்து வருண், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த மர்ம நபர்கள், ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News