செய்திகள்
பீகாரில் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என காங்கிரஸ் குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது இதன் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மூளை காய்ச்சல் பரவியிருப்பதை தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை இன்றுவரை 128 ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் கோகாய் கூறுகையில், பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் குழந்தைகள் பலியாகி வருவது தேசிய துயரமாக உள்ளது. குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
மூளை காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வருவதற்கு மத்தியில் உள்ள பாஜகவும், மாநிலத்தை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் அரசுகளுமே காரணம் என குற்றம்சாட்டினார்.