செய்திகள்

டாக்டரை தாக்கிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது - மவுனம் கலைத்தார் மம்தா

Published On 2019-06-15 13:18 GMT   |   Update On 2019-06-15 13:18 GMT
மேற்கு வங்காளத்தில் டாக்டர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வலுத்துவரும் நிலையில் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இதைக் கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள சுமார் 300 டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை டாக்டர்கள் நிராகரித்து விட்டனர்.

இந்நிலையில், கொல்கத்தா நகரில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி,  பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.



’மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. இவ்விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயிற்சி டாக்டரின் சிகிச்சை செலவு அனைத்தையும் மாநில அரசே ஏற்கும். தங்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் அனைவரும் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.

’டாக்டர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. போராட்டம் நடத்தும் டாக்டர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த மந்திரிகளையும் மாநில அரசின் முதன்மை செயலாளரையும் நான் அனுப்பி வைத்தேன். ஆனால், டாக்டர்கள் தரப்பில் இருந்து யாரும் சமாதானத்துக்கு முன்வரவில்லை.

போராட்டக்காரர்கள் யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை. அவர்கள் மீது எவ்விதமான போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்படாது. எஸ்மா சட்டத்தை பயன்படுத்தி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News