செய்திகள்

அரபிக் கடலில் உருவானது 'வாயு' புயல்

Published On 2019-06-11 01:37 GMT   |   Update On 2019-06-11 01:37 GMT
தென்கிழக்கு அரபிக் கடலில் 'வாயு' புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.  தற்போது தென்கிழக்கு அரேபிக் கடலில் காற்றழுத்தாழ்வு உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 'வாயு' புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் ஜுன் 13 இல் வாயு புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  வாயு புயலால் ஜுன் 13 ஆம் தேதி 135 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கு நோக்கி நகரும் வாயு புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்.  இதனால் வருகிற 13 மற்றும் 14-ந்தேதி குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளை  உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
Tags:    

Similar News