செய்திகள்

கேதார்நாத் யாத்திரை: மோடிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார்

Published On 2019-05-19 08:29 GMT   |   Update On 2019-05-19 09:52 GMT
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேதார்நாத், பதிரிநாத் சென்றுள்ள நிலையில், கேதார்நாத் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள புனித குகைக்கு சென்று அவர் தியானம் மேற்கொண்டார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டு இருந்த மோடி இன்று காலை குகையை விட்டு வெளியே வந்தார். பிரதமரின் வருகையையொட்டி கேதர்நாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் கமி‌ஷனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு மோடி கூறினார்.

பின்னர் அவர் அங்கிருந்து பத்ரிநாத் சென்று அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டார். இன்று பிற்பகல் மோடி டெல்லி திரும்புகிறார்.

அவர் கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த காட்சி டிவி-க்களில் ஒளிபரப்பானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதில் பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் யாத்திரை டெலிவி‌ஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. அதன் மூலம் மோடி தேர்தல் விதிமுறையை மீறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.



இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் ‘‘கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 17-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த போதிலும், இரண்டு நாட்களாக மோடியின் கேதார்நாத் யாத்திரை தேசிய மற்றும் உள்ளூர் டிவி-க்களில் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தேர்தல் விதிமுறையை மீறியதாகும்.

அவரது செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவகையில் வாக்காளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈர்க்கக்கூடிய செயலாகும். மோடி பின்பக்கத்தில் இருந்து மோடி, மோடி என்ற கோஷம் எழுப்பப்பட்டது’’ என்றார்.
Tags:    

Similar News