செய்திகள்

பாலக்காடு அருகே வன ஊழியரை யானை மிதித்து கொன்றது

Published On 2019-04-27 06:46 GMT   |   Update On 2019-04-27 06:46 GMT
பாலக்காடு அருகே வன ஊழியரை யானை மிதித்து கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் மோகனன் (59). இவர் வாளையாறு வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மாலை 5 மணியளவில் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வேலஞ்சேரியில் காட்டு பகுதியில் இருந்து 3 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வாளையாறு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களுடன் மோகனனும் சென்று இருந்தார்.

அவர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை திரும்பி வந்து வன ஊழியர் மோகனனை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

யானையை விரட்டும் போது தப்பி ஓடிய மற்ற ஊழியர்களான விஸ்வநாதன், சசி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் தலைமை வன அதிகாரி சுரேந்திர நாத் அங்கு விரைந்து சென்றார். வேறு ஊழியர்களை வரவைழத்து யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது.

யானை தாக்கி உயிர் இழந்த மோகனன் உடல் மீட்கப்பட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

யானை தாக்கி பலியான மோகனன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதல் கட்டமாக ரூ. 5 லட்சம் இன்று வழங்கப்படும் எனவும் தலைமை வனஅதிகாரி சுரேந்திர நாத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News