செய்திகள்

வி.வி.பாட் வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய 21 அரசியல் கட்சிகளுக்கு ஒரு வாரம் அவகாசம்

Published On 2019-04-01 10:04 GMT   |   Update On 2019-04-01 10:04 GMT
வாக்கு எண்ணிக்கையின் போது 50% ஒப்புகை சீட்டையும் எண்ணக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. #VVPAT
புதுடெல்லி:

வாக்கு எண்ணிக்கையின் போது 50% ஒப்புகை சீட்டையும் எண்ணக்கோரி திமுக உள்ளிட்ட காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்றும், 50 சதவீத வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், தேர்தல் முடிவுகளையே 6 நாள் கழித்து தான் அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது.

வி.வி.பாட் எந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரத்திற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, 21 கட்சிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்தி வைத்தனர். #ElectionCommission #SupremeCourt #VVPAT
Tags:    

Similar News