செய்திகள்

பாராளுமன்றம் 31-ந் தேதி கூடுகிறது - 1ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

Published On 2019-01-28 03:10 GMT   |   Update On 2019-01-28 03:13 GMT
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 31-ந் தேதி தொடங்குகிறது. 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சபையை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார். #Parliament #Budgetsession
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர், பிப்ரவரி 13-ந் தேதி வரை நீடிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும்.

இந்த ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

எனவே, பிப்ரவரி 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், இடைக்காலமாக அப்பொறுப்பை கவனிக்கும் பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் இரு அவைகளின் தலைவர்களும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 30-ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, பட்ஜெட் தொடர் தொடங்கு வதற்கு முன்பு, 31-ந் தேதி காலையில், சபையில் உள்ள கட்சிகளின் குழு தலைவர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்.

அதுபோல், மத்திய அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் என்று தெரிகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். #Parliament #Budgetsession
Tags:    

Similar News