செய்திகள்

டிச. 5-ந் தேதிக்குள் ராமர் கோவில் கட்டும் தேதியை அறிவிக்காவிட்டால் தீக்குளிப்பேன்- அயோத்தி சாமியார்

Published On 2018-11-27 14:05 GMT   |   Update On 2018-11-27 14:05 GMT
ராமர் கோவில் கட்டும் தேதியை உடனடியாக அறிவிக்காவிட்டால் அடுத்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பரமஹன்ஸ்தாஸ் அறிவித்துள்ளார். #Ayodhyarally #Ayodhyadispute #Ramtemple #ParamhansDas
லக்னோ:

அயோத்தியில் தபாசி சாவ்னி என்ற கோவில் உள்ளது. இதன் தலைமை சாமியாராக பரமஹன்ஸ் தாஸ் இருந்து வருகிறார்.

அயோத்தியில் ராமர் கோவிலை உடனடியாக கட்ட வேண்டும் என்று கடந்த மாதம் 6-ந்தேதி முதல் சாகும்வரை உண்ணா விரதத்தை தொடங்கினார்.

ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவரை சந்திக்க அழைப்பு விடுத்தார். இருவரும் சந்தித்து பேசினார்கள். இதனால் அப்போதைய உண்ணாவிரத போராட்டத்தை அவர் கைவிட்டார்.

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டும் தேதியை உடனடியாக அறிவிக்காவிட்டால் அடுத்த மாதம் 6-ந்தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பரமஹன்ஸ்தாஸ் அறிவித்துள்ளார்.

நான் உண்ணாவிரதம் இருந்த போது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் என்னை அழைத்து பேசினார். அப்போது விரைவில் ராமர் கோவில் கட்டும் தேதியை அறிவிக்க இருக்கிறோம். எனவே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இதனால் தான் அப்போது உண்ணாவிரதத்தை கைவிட்டேன். ஆனால் எனக்கு வாக்குறுதி கொடுத்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் எந்த அறிவிப்பும் வெளிவருவது போல தெரியவில்லை.

பிரதமரும், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் வருகிற 5-ந்தேதிக்குள் ராமர் கோவில் கட்டுமான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் 6-ந்தேதி நாள் தீக்குளித்து தற்கொலை செய்வேன்.

ராமர் கோவிலை கட்டுவார்கள் என்று நம்பி தான் பாரதிய ஜனதாவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டனர்.

இப்போது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தில் நாடகமாடுகிறார்கள்.

விசுவஇந்து பரி‌ஷத்தை தூண்டிவிட்டு இந்த நாடகம் நடத்தப்படுகிறது. பாரதிய ஜனதாவின் வேண்டுகோள் படிதான் விசுவ இந்து பரி‌ஷத் அயோத்தியில் தர்மசபா என்ற நிகழ்ச்சியை நடத்தி ராமர் கோவில் கட்ட வற்புறுத்தியது. இது தர்ம சபா அல்ல, அதர்ம சபா.

பாரதிய ஜனதாவின் திட்டத்தின்படி விசுவ இந்து பரி‌ஷத் இயங்கி வருகிறது. அவர்கள் பணம் கொடுத்து இந்த பேரணியை நடத்த வைத்து இருக்கிறார்கள். விசுவ இந்து பரி‌ஷத்தினர் உண்மையான சாமியார்கள் யாரையும் அழைக்கவில்லை. எனக்குகூட அழைப்பு வரவில்லை. எங்களுக்கு ராமர் கோவில் வேண்டும். இதை யோகி ஆதித்யநாத் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.#Ayodhyarally #Ayodhyadispute #Ramtemple #ParamhansDas
Tags:    

Similar News