செய்திகள்
காரின் அடியில் சிக்கிய சிறுவன் காயமின்றி எழுந்து ஓடிய காட்சி.

கால்பந்து விளையாடிய போது காருக்கு அடியில் சிக்கி சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்- வீடியோ

Published On 2018-09-28 05:11 GMT   |   Update On 2018-09-28 05:11 GMT
மும்பையில் கால்பந்து விளையாடிய போது காருக்கு அடியில் சிக்கிய சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.#MumbaiBoy
மும்பை:

மும்பையில் கடந்த 24-ந்தேதி காரில் சிக்கிய சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்தது.

கடந்த 24-ந்தேதி மாலை 7 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு சிறுவன் உதைத்த பந்து குடியிருப்பு ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே உருண்டு ஓடிவந்தது.

இரு சிறுவர்கள் அந்த பந்தை விரட்டி வந்து கடத்திச் சென்று விடுகிறார்கள். அப்போது சிகப்பு கலர் டிசர்ட் அணிந்த சிறுவனின் ஷு லேஸ் கழன்றுவிட்டதால் கார் அருகில் முழங்கால் போட்டு அமர்ந்து ஷு லேஸ் கயிரை சரி செய்கிறான். இந்த நேரத்தில் காரில் அமர்ந்து இருந்த பெண், சிறுவன் காருக்கு முன்னாள் அமர்ந்து இருப்பது தெரியாமல் காரை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.

இதில் சிறுவன் காருக்கு அடியில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்படுகிறான். நல்ல வேளையாக இரு சக்கரத்துக்கும் இடையில் சிக்கிக் கொள்ள அப்படியே தரையில் படுத்துக்கொள்கிறான். இதனால் கார் சக்கரத்தில் அடிபடாமல் அதிசயமாக தப்பிவிட்டான்.

அதை கார் ஓட்டிய பெண்ணும் கவனிக்கவில்லை. அவனுடன் விளையாடிய சிறுவர்களும் கவனிக்கவில்லை. உயிர் தப்பிய சிறுவன் எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல் தானாகவே எழுந்து ஓடிச் சென்று மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுகிறான். எதுவும் நடக்காதது போல் அதிர்ச்சியின்றி கால்பந்து விளையாட்டில் மும்முரம் காட்டினான்.

இந்தக் காட்சி அந்த குடியிருப்பின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. முதலில் சிறுவன் மீது கார் மோதுவதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவன் துள்ளிக் குதித்து ஓடுவதைப் பார்த்து “அப்பாடா... தப்பித்தான்... கடவுளே...” என்று நிம்மதி அடைய முடிகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த மும்பை போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை கைது செய்தனர். அஜாக்கிரதையாக காரை ஓட்டிச் சென்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகள் விளையாடும் போது கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #MumbaiBoy

Video Courtesy: DailyMail

Tags:    

Similar News