செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்? சிறப்பு நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Published On 2018-09-11 04:13 GMT   |   Update On 2018-09-11 04:13 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை குறித்த காலக்கெடுவிற்குள் எப்படி முடிக்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்? என லக்னோ சிறப்பு நீதிமன்றத்திடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. #BabriMasjidDemolition
புதுடெல்லி:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷி மற்றும் 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், 2019ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டனர். அதுவரை விசாரணை நீதிபதியை மாற்றக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.



இதன்படி தினசரி இந்த வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாபர் மசூதி வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை முடியும் வரை நீதிபதி யாதவின் பதவி உயர்வை அலகாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நீதிபதி யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எஸ்.கே.யாதவின் மனுவிற்கு உத்தரப் பிரதேச அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

‘உச்ச நீதிமன்றம் விடுத்த கெடு அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறதா என்பதை அறிய விரும்புகிறோம். எத்தனை நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் என்பது பற்றி விசாரணை நீதிபதி சிலிட்ட கவரில் முழு அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #BabriMasjidDemolition
Tags:    

Similar News