செய்திகள்

விற்பனைக்கு வைத்திருந்த போர்வைகளை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு இலவசமாக அளித்த தெரு வியாபாரி

Published On 2018-08-12 13:15 GMT   |   Update On 2018-08-12 13:15 GMT
கேரளாவில் கனமழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்தவர்களுக்கு, விற்பனைக்காக வைத்திருந்த போர்வகளை இலவசமாக அளித்த தெரு வியாபாரியின் ஈகை உள்ளம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. #KeralaRain #KeralaFloods
திருவனந்தபுரம் :

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கம்பளி போர்வை வியாபாரி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகள் அனைத்தையும் , உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. 

வயிற்று பிழைப்புக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ம.பி.யில் இருந்து போர்வைகள் வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்து வரும் தெரு வியாபாரி விஷ்னு, மாங்கோடு பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட போது அங்குள்ள பள்ளி ஒன்றில் கனமழையால் பாதிகப்பட்டவர்களுக்கான முகாம் திறக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

மழை பாதிப்பினால் உடைமைகளை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு தன்னுடைய போர்வகளை இலவசமாக வழங்க விரும்பிய அவர், அப்பகுதி தாசில்தாரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, விஷ்னுவின் விருப்பத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி முகமது யூசுப்பிடம் தெரிவித்த தாசில்தார் திவாகரன், விஷ்னுவின் போர்வைகளை முகாமிற்கு எடுத்து செல்வதற்கான வாகன உதவியை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.

அதன்படி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த  37 குடும்பங்களை சேர்ந்த 122 பேருக்கு தான் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகளை விஷ்னு தானமாக வழங்கினார். விஷ்னுவின் இந்த ஈகை உள்ளத்தை அறிந்த பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.  #KeralaRain #KeralaFloods 
Tags:    

Similar News