செய்திகள்
ஸ்டேஷனுக்குள் புகுந்து போலீசாரை தாக்கிய கிராமத்தினர் - எஸ்.ஐ.க்கு தலையில் 8 தையல்
விசாரணைக்கு வந்தவர்களை திட்டியதாக கூறி 150 பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்துக்குள் நுழைந்து போலீசாரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
அமராவதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராப்பூரை சேர்ந்த மூவர் அதே பகுதியை சேர்ந்த இன்னொருவரிடம் பணம் பெற்று கொண்டு திரும்ப வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்த நபர், ராப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பணம் பெற்றதாக கூறப்படும் நபர் மற்றும் இரண்டு பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த எஸ்.ஐ. லட்சுமண்ராவ், ஜாதி பெயரை கூறி திட்டியதோடு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தங்களுக்கு ஆதரவாக கிராம மக்களையும் திரட்டிக் கொண்டு காவல்நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்து எஸ்.ஐ லட்சுமண்ராவை கடுமையாக தாக்கியது. காவல் நிலையத்திற்குள் உள்ள சிறைக்குள் புகுந்து தப்ப முயன்ற எஸ்ஐ லட்சுமண்ராவை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். தடுக்க முயன்ற போலீசாரையும் தாக்கினர்.
இந்த தாக்குதலில் எஸ்.ஐ லஷ்மண்ராவ் மற்றும் போலீசார் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ராப்பூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். பொது மக்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த எஸ்.ஐ லஷ்மண்ராவுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.