செய்திகள்

உ.பி.யில் மூன்று விவசாயிகள் சுட்டுக்கொலை - வயலில் தூங்கியபோது தீர்த்துக் கட்டிய கொடூரம்

Published On 2018-06-19 06:06 GMT   |   Update On 2018-06-19 06:06 GMT
உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே வயல்வெளியில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. #UPTripleMurder #FarmersShotDead
மதுரா:

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம், பாயு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேந்தர் சிங் (45), பவார் சிங் (50), சத்ய பிரகாஷ் (70). உறவினர்களான இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு தங்கள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களின் பாதுகாப்பிற்காக வயல்வெளியில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் அவர்கள் மூவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு கண்விழித்த உறவினர்கள் வயல்வெளிக்கு சென்றபோது மூன்றுபேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடல்கள் மீது விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #UPTripleMurder #FarmersShotDead
Tags:    

Similar News