செய்திகள்

காஷ்மீரில் ராணுவ முகாம்களை தகர்க்க பாக். பயங்கரவாதிகள் சதிதிட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2018-06-17 07:43 GMT   |   Update On 2018-06-17 07:43 GMT
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீரில் மத்தியப்படை வாகனங்கள் மீதும், ராணுவ முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதுபோல் மேலும் சில ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக பூஞ்ச் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 2 ராணுவ முகாம்களுக்கு பயங்கரவாதிகள் குறிவைத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ காத்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடலாம். எனவே உஷாராக இருக்குமாறு பாதுகாப்பு படையினரை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

35 பயங்கரவாதிகள் வரை இந்த தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளும், ஊடுருவல்காரர்களும் பெரிய அளவில் முகாமிட்டு உள்ளனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம். என்று தெரிய வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரவு நேரத்தில் அவர்கள் ஊடுருவ முயற்சித்து வருவதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதை முறியடிக்க ராணுவமும் பாதுகாப்பு படையினரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
Tags:    

Similar News