செய்திகள்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் - பிரதமர் இரங்கல்

Published On 2018-03-20 13:34 GMT   |   Update On 2018-03-20 13:34 GMT
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில் அவர்களது குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக பாராளுமன்றத்தில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர்களில் 38 பிரேதங்களில் நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனை ஈராக் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருநபரின் அடையாளம் 70 சதவீதம் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில், மோசூல் நகரில் கொடூரமாக கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மோசூல் நகரில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் முயற்சிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் குறிப்பாக, மந்திரிகள் சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அனைத்து வகையிலும் பாடுபட்டு வந்தனர்.

மோசூலில் உயிரிழந்த அனைவருக்கும் எங்களது மரியாதைகளை தெரிவித்து கொள்கிறோம். தங்களது அன்புக்குரிய உறவினர்களை இழந்து துயரப்படும் குடும்பத்தாருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். #tamilnews
Tags:    

Similar News