செய்திகள்

ஈராக்கில் பிணைக்கைதிகளாக இருந்த 39 இந்தியர்கள் கொலை- பாராளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் தகவல்

Published On 2018-03-20 07:08 GMT   |   Update On 2018-03-20 07:08 GMT
ஈராக்கின் மோசூல் நகரில் பயங்கரவாதிகளால் கடத்தி பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். #Iraq #39indians #sushmaswaraj
பாக்தாத்:

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், 'ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் ஒத்துள்ளது. இதனை உறுதி செய்த பிறகே அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


மந்திரி வி.கே.சிங் ஈராக்கிற்கு சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார். விமானம் மூலம் வரும் அவர்களின் உடல்கள் அமிர்தசரசிற்கு கொண்டு செல்லப்பட்ட பின் கொல்கத்தாவிற்கு செல்லும்' என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மேலும், இறந்த இந்தியர்களுக்கு பாராளுமன்றத்தில் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர். அவர்கள் மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iraq #39indians #sushmaswaraj #tamilnews

Tags:    

Similar News