செய்திகள்

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ஆஸ்தான பண்டிதர் தகவல்

Published On 2018-03-20 05:45 GMT   |   Update On 2018-03-20 05:45 GMT
ஆந்திராவில் 2019ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ஆஸ்தான பண்டிதர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி:

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ஆஸ்தான பண்டிதர் ஸ்ரீ முனுகுராம லிங்கசாமி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை யொட்டி ஆந்திர மாநிலத்தில் இந்தாண்டு எப்படி இருக்கும் என்றும் கோவில் கொடிமரம் அருகே பஞ்சாங்கம் படித்தார்.

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2019ம்) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தெலுங்கானாவில் மீண்டும் அதே அரசு தலைமையிலான ஆட்சி நடக்கும். டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடந்தால் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தால் பா.ஜனதாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு எம்.பி. சீட் கூட கிடைக்காது.

உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் பா.ஜ.வுக்கு பெயரளவுக்கு மட்டுமே எம்.பி. சீட் கிடைக்கும்.

நடிகை ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது இல்லை. தமிழகத்தில் ரஜினிகாந்தின் அரசியல் படம் வெற்றியடையும்.



ஆந்திர மாநிலத்தில் விவசாயத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இருக்காது. இதற்கு காரணம் வானிலை மாற்றங்கள் விவசாயிகளுக்கு சாதகமில்லாத நிலையில் உள்ளது.

கிரிக்கெட்டில் இந்தியா தான் உலகக்கோப்பையை கைப்பற்றும். அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதி விசாகா சாரதா பீடாதிபதி சொரூபா நந்தேந்திரா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கு புத்தாண்டான விளம்பி நாம ஆண்டால் ஆந்திராவுக்கு நற்பலன்கள் கிடைக்காது.

இதனால் மாநிலத்தில் ஏராளமான அளவில் குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதற்கு தீர்வாக விசாகா சாரதா பீடத்தில் சாந்தி ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாந்தி ஹோமத்திற்கு ஏழுமலையான் ஆசி வேண்டியே இங்கு வந்தேன் என்றார். #tamilnews
Tags:    

Similar News