செய்திகள்

குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் மத்தியப்பிரதேசம் மாநில கவர்னராக நாளை பதவியேற்பு

Published On 2018-01-22 15:53 GMT   |   Update On 2018-01-22 15:53 GMT
குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்த முன்னாள் பெண் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் மத்தியப்பிரதேசம் மாநில கவர்னராக நாளை பதவியேற்கிறார். #Anandiben Patel
புதுடெல்லி:

குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றதும் அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த ஆனந்திபென் பட்டேல் அம்மாநில முதல்வராக பதவியேற்றார். பட்டேல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டம், தலித்துக்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் குஜராத் மாநில அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக 2016-ம் ஆண்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த ஆனந்திபென் பட்டேல் தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவரை மத்தியப்பிரதேசம் மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, போபால் நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆனந்திபென் பட்டேலுக்கு மத்தியப்பிரதேசம் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கிடையில், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான போபால் நகருக்கு வந்த ஆனந்திபென் பட்டேல், வரும் வழியில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று வழிபாடு செய்தார். #tamilnews #AnandibenPatel #Governor 
Tags:    

Similar News