செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள்: லஞ்ச புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை?

Published On 2018-01-22 03:09 GMT   |   Update On 2018-01-22 03:09 GMT
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு:

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதர சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கடந்த ஆண்டு குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழுவை கர்நாடக அரசு அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இதுபற்றி லோக் அயுக்தா அல்லது ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும் பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியானது.

தற்போது அந்த அறிக்கை உள்துறையின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இருக்கிறது.

இந்த நிலையில், விசாரணை குழு அளித்த அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி தீர்மானித்திருப்பதாகவும், இதனால் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ரூபா கூறிய குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு படை அல்லது லோக் அயுக்தா போலீசார் விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஏற்கனவே ஊழல் தடுப்பு படையில் டி.ஐ.ஜி. ரூபா புகார் கொடுத்திருப்பதால் ஊழல் தடுப்பு படை போலீஸ் விசாரணைக்கு கூடிய விரைவில் மாநில அரசு உத்தரவிடலாம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி கர்நாடக அரசு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. #tamilnews
Tags:    

Similar News