செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் இருந்ததால் ஜெயலலிதா கொடுத்த காரை ஒப்படைத்துவிட்டேன்: நாஞ்சில் சம்பத்

Published On 2018-01-18 08:45 GMT   |   Update On 2018-01-18 08:45 GMT
ஜெயலலிதா கொடுத்த கார் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அந்த காரை பயன்படுத்துவது சரியல்ல என்று ஒப்படைத்துவிட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

பெங்களூரு:

தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெங்களூரு ஸ்ரீராமபுரம் சன்ரைஸ் சர்க்கிள் பகுதியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தினகரன் அணி ஆதரவாளரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு கொடுத்திருந்த காரை எடப்பாடி பழனிசாமி அணியினர் திரும்ப கேட்டனர். நான் அதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். அந்த கார் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல் எனக்கு இப்போது தான் கிடைத்தது. இதனால் அந்த காரை பயன்படுத்துவது சரியல்ல என்று அவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.

என் மீது 14 பொய் வழக்குகளை போட்டுள்ளனர். இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி வீட்டுக்கு போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தினகரன் அணி ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி பேசியதாவது:-

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு இமாலய வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் இந்த ஆட்சிக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு விரைவில் தூக்கி எறியப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார், அவைத்தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News