செய்திகள்
சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சுகேஷின் வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களும் நேற்று முன்தினம் முடிவடைந்ததையடுத்து மனுமீதான தீர்ப்பை 12-ம் தேதி வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். #tamilnews