search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismisses"

    சுட்டெரிக்கும் கோடைக்காலம், முஸ்லிம்களின் நோன்பு காலம் என்பதால் பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்றுடன் ஆறுகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுவாக வாக்குப்பதிவு நேரமானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5.30 மணியில் இருந்து தொடங்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் நிஜாமுதீன் பாட்ஷா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.



    இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறப்பது காரணமாகவும், தற்போதைய காலக்கட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதாலும் வாக்குப்பதிவின் நேரத்தை மக்களின் நலன்கருதி மாற்றி அமைக்க வேண்டும்’ என தனது மனுவில் நிஜாமுதீன் பாட்ஷா குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வின் முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    வாக்குப்பதிவுக்கான நேரத்தை முன்கூட்டியே அதிகாலை என்று மாற்றினால் தேர்தல் அலுவலர்களின் போக்குவரத்து தொடர்பான சிரமங்கள் நேரிடும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காலை 7 மணி என்பது வெயில் குறைவாக உள்ள நேரம். அதேபோல் மாலை 6 மணிவரை வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

    கால்நடைத்தீவன ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தது. #SupremeCourt #LaluPrasadYadav
    புதுடெல்லி:

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஒரு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார். மீதி 3 வழக்குகளில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, லாலு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரை ஜாமீனில் விடுவித்தால், அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என்று கூறி, அதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று லாலுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

    தான் 24 மாதங்கள் ஜெயிலில் இருந்திருப்பதாக லாலு கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை. “14 ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஒப்பிடுகையில், 24 மாதங்கள் என்பது ஒன்றுமே இல்லை” என்று அவர்கள் கூறினர்.

    ஜாமீன் கிடைக்காததால், நாடாளுமன்ற தேர்தலில் லாலு பிரசாரம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. #SupremeCourt #LaluPrasadYadav

    சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட 3 மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #LSPolls #HighCourt
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.



    இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இவ்வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக கூறியது. கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளையும் மாற்ற மறுத்துவிட்டது. பிரார்த்தனைக்கு கிறிஸ்தவர்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வர போதிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனவே, மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். #LSPolls #HighCourt

    ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RafaleCase #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.

    பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

    ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். #RafaleCase #SupremeCourt

    சபரிமலைக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SabarimalaTemple #Rehna
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.



    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. #SabarimalaTemple #Rehna
    அனைத்து கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தேவாலயங்களில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #WomenEntryTemples
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் நடை திறந்தபோது இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இந்த சீசனில் பெண்கள் யாரும் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



    இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மற்றும் காமக்யா கோவிலில் ஆண்கள் எப்போதும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த மனுவை இன்று ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் எந்த கோவில்களையும் குறிப்பிடாததால், விசாரணைக்கு ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். #DelhiHC #WomenEntryTemples
    பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார்களுக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என கேரள ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #KeralaHighCourt #KeralaPriests
    கொச்சி:

    கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.  #KeralaHighCourt #KeralaPriests #tamilnews

    புதிதாக நியமிக்கப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 7 நீதிபதிகளை நியமித்து சமீபத்தில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணியம் பிரசாத் உள்பட 7 பேரும் கடந்த 4-ந் தேதி நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இவர்களில் சுப்பிரமணியம் பிரசாத்தை நீதிபதியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வக்கீல் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டிலும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், சுப்பிரமணியம் பிரசாத் அதுபோன்று பணியாற்றவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுப்பிரமணியம் பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது’ என்று வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் நியமனம் நடைபெறவில்லை. ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு தகுதி உள்ளது. இந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் குழு(கொலிஜியம்) முடிவு செய்துள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். #tamilnews
    ×