search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Religions"

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்யும்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. இவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார். காந்தியின் மானசீக கொள்ளு பேரன் என்ற முறையில் நியாயம் கேட்க வந்துள்ளேன்” என்று கூறினார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது தமிழ்நாடு முழுவதும் 74 போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்றாலும் கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதனால் நேற்று அவரை நோக்கி செருப்பு, முட்டை, சாணம் போன்றவை வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் சூலூர் தொகுதியில் இன்று பிரசாரம் செய்ய இருந்ததை போலீசார் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தடுத்து உள்ளனர்.

    கமல்ஹாசன் கோவை பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் அரவக்குறிச்சியில் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறீர்களே?

    பதில்:- ஆமாம். நான் சொன்னதில் தவறான கருத்து எதுவும் கிடையாது. அது பல வருடங்களாக சொல்லப்பட்டது. இப்போது அதை திடீரென்று கவனிப்பது அவர்களின் சவுகரியத்துக்காக கவனிப்பதுபோல் தோன்றுகிறது.

    இதே பரப்புரையை நான் மெரினாவில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு சொல்லி இருக்கிறேன். பாராளுமன்ற தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தின்போது மெரினா கடற்கரையில் இதே கருத்துகளை இதே வி‌ஷயங்களை நான் சொல்லி இருக்கிறேன்.

    அப்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் எது கிடைக்கிறதோ அதை பிடித்துக் கொண்டு விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மெரினாவில் நான் பேசியபோது எல்லா மதத்தினரும் இருந்தனர்.

    கேள்வி:- உங்கள் கருத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதானே அவர்களின் கருத்து?

    பதில்:- உருவாக்கினார்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. உருவாகவில்லை. 3 நாட்கள் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் இவர்கள் உருவாக்கி விட்டதுதானே தவிர வேறொன்றும் இல்லை.



    பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் மோடி அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு பதில் சொல்வதற்கு சரித்திரமும், சரித்திர ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

    கேள்வி:- இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்:- தாக்குதல் அவர்கள் மீது நடக்கவில்லையே. அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கேள்வி:- உங்கள் பேட்டியில் நீங்கள் ஊடகங்களை குறை சொல்லி இருக்கிறீர்களே?

    பதில்:- என்னை குறை சொல்லும்போது நானும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டி இருக்கிறது. வாலையும், தலையையும் கத்தரித்து போட்டீர்களேயானால் யாரும் யாரையும் திட்டுவது மாதிரி நாம் சித்தரித்து விட முடியும்.

    அதன் பிறகு அதை முழுதாக போட்டார்கள். அதை பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம். பார்க்க முடியாதவர்கள், பார்க்க சகியாதவர்கள் அவர்கள் கூற்றை தொடர்ந்து பேசுவார்கள்.

    கட்சித் தலைவர்களோ, பிரசாரம் செய்பவர்களோ இனி இந்த வி‌ஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அதில் மடம் தலைவர்களுக்கு விதிவிலக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் மடத்தின் தலைவர்கள் சிலர் பேசி இருக்கிறார்கள்.

    அதை தூண்டி விடுபவர்கள் என்று சொன்னால் எங்கள் கட்சியில் இருந்து யாரும் அதைச் செய்யவில்லை. நாங்கள் அமைதியை காப்பதற்கான எல்லா வேலையையும் செய்கிறோம்.

    கேள்வி:- மத நல்லிணக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடிய தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் யாருமே உங்கள் கருத்தை ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அப்படியா? அவர்களுக்கு அஜெண்டா இருக்கிறது. அதனால் ஆதரிக்காமல் இருந்து இருக்கலாம்.

    கேள்வி:- ஓராண்டுக்கு மேல் தீவிர அரசியலில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை பேசிய பிறகுதான் தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறீர்களே?

    பதில்:- நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லிக் கொள்கிறீர்கள். நாங்கள் தீவிர அரசியலுக்கு வந்து விட்டோம் என்று சொன்னேன். அதை போன வருடத்தில் இருந்து என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    கேள்வி:- பா.ஜனதா சார்பில் காவல் நிலையங்களில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் கைதுக்கு பயப்படுகிறீர்களா?

    பதில்:- கைதுக்கு பயப்படவில்லை. எனக்கு பிரசாரம் இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆவல்தான். கைது பண்ணட்டும். எனக்கு ஒன்றும் இல்லை. கைது செய்தால் இன்னும் பதட்டம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை. அறிவுரை. அதை செய்யாமல் இருப்பது நல்லது.

    கேள்வி:- உங்கள் கருத்தை உங்கள் நண்பர்களும் திரையுலக சகாக்களும் ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஜனநாயக நாடு.

    கேள்வி:- கோட்சே பற்றி பேச வேண்டிய தேவை இப்போது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- கண்டிப்பாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள். மறுபடியும் காந்தியைப் பற்றி நல்ல நல்ல வி‌ஷயங்கள் வெளியே வருகிறது. அதை வெளிக்கொண்டு வரவும் சரித்திரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் சரித்திரத்தை நாம் நினைவு கொள்வது நல்லது.

    கேள்வி:- பிரசாரம் செய்யவிடாமல் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி இருக்கிறாரே?

    பதில்:- அரசியல் குறுக்கீடு எனக்கே இருக்கிறது. சூலூரில் எங்களுக்கு கடைசி நாள் பிரசாரம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான பிரசார நாள். அதை இவர்கள் காரணம் காட்டி தடை செய்து இருக்கிறார்கள். பதட்ட சூழல் அங்கே நிலவும் பட்சத்தில் ஏன் சூலூரில் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்பது எங்களுடைய பரிந்துரை.

    கேள்வி:- உங்கள் நாக்கு அறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?

    பதில்:- அது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    கேள்வி:- சோனியாகாந்தி வருகிற 23-ந்தேதி பா.ஜனதா அணியில் இல்லாத கட்சிகளை அழைத்துள்ளார். உங்களுக்கு அழைப்பு வந்ததா?

    பதில்:- எனக்கு அழைப்பு வரவில்லை. நான் இப்போது தான் ஊருக்கு வந்தேன்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படுகிறதே?

    பதில்:- இது முதல் முறை இல்லை. வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு கால கட்டங்களில் எனக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் தெளிவான போராட்டங்கள் இல்லை என்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.

    கேள்வி:- கட்சிகளை தாண்டி இந்துக்களின் மனது புண்பட்டிருந்தால்?

    பதில்:- இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். மொத்தமாக நீங்கள் சொல்லக் கூடாது.

    அரசியலில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் புண்பட்டிருப்பார்கள். அரசியலில் இல்லாத மதம் சார்ந்தவர்கள் என்ன இப்படி சொல்லி விட்டார் என்று கொஞ்ச நேரம் யோசிப்பார்கள். புண்படுவது, கோபப்படுவது, தாக்கப்படுவது இதெல்லாம் தனிப்பட்ட அரசியல். சாதனங்களை கையில் எடுத்து விளையாடுகிறார்கள்.

    கேள்வி:- உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறீர்களா?

    பதில்:- இல்லை. நல்ல பாதுகாப்பு எனக்கு இருந்தது. இங்கு கூட பாதுகாப்பை மீறி எதுவும் செய்ய வேண்டும் என்றால் யாரும் செய்யலாம். இதை செய்வது பெரிய கூட்டம் என்றால் பதட்டப்பட வாய்ப்பு உண்டு. இதில் 2 பேர், 4 பேர் ஏவப்பட்டவர்கள்.

    கேள்வி:- உங்களை நோக்கி செருப்பு வீசப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அரசியலின் தரம் குறைந்து விட்டது. நாதுராம் கோட்சே பற்றி நான் சொன்ன கருத்துக்காக என்னை நோக்கி செருப்பு வீசியுள்ளனர். செருப்பு வீசுவதாலோ, கல் வீசுவதாலோ என்னை அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது.

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது. மத நல்லிணக்கத்துக்காகவே நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து மதத்தையும் நான் சமமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அனைத்து கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தேவாலயங்களில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #WomenEntryTemples
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் நடை திறந்தபோது இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இந்த சீசனில் பெண்கள் யாரும் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



    இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மற்றும் காமக்யா கோவிலில் ஆண்கள் எப்போதும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த மனுவை இன்று ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் எந்த கோவில்களையும் குறிப்பிடாததால், விசாரணைக்கு ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். #DelhiHC #WomenEntryTemples
    ×