செய்திகள்

உ.பி.யில் கொடூரம்: காதலியுடன் ஓடியவரின் தாயாரை கடத்திச் சென்று கற்பழித்த கும்பல்

Published On 2017-12-30 10:04 GMT   |   Update On 2017-12-30 10:04 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலியுடன் ஓடிய வாலிபரின் தாயை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது வாலிபரும், முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த நவம்பர் 20-ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் அந்த வாலிபரின், தந்தை, தாய், சகோதரர் மற்றும் மற்றொரு உறவினரை கடத்தி ஷமிலி மாவட்டத்தின் நோஜால் கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்த வாலிபருடன் சென்ற பெண்ணின் தந்தை, அவரது இரு சகோதரர்களும் அந்த கும்பலில்  அடங்குவர். கொடுமைப்படுத்தியதுடன் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் அந்த வாலிபரின் தாயை கற்பழித்துள்ளனர்.



இதுகுறித்து 25-ம் தேதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.  அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டை சோதனை செய்த போலீசார், கடத்தப்பட்டவர்களை மீட்டனர். இதையடுத்து அவர்களை கடத்தியவர்கள் மீது முதலில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த கும்பல் அந்த வாலிபரின் தாயை கற்பழித்த விசயம் தெரியவந்துள்ளது. எனவே இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் மீதும் கற்பழிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தப்பியோடிய மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News