செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.20 கோடி உயர்வு
சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுற்கான மண்டல - மகரவிளக்கு பூஜை கடந்த நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. இந்த பூஜை சுமார் 3 மாதம் நடைபெறும்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 15 முதல் டிசம்பர் 25-ம் தேதிக்குட்பட்ட யாத்திரை காலத்தின் முதல் பகுதியில் உண்டியல் வசூல், டிக்கெட் மற்றும் பிரசாதம் விற்பனை மூலம் 168.86 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 20 கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.