செய்திகள்

காஷ்மீரில் வங்கி காவலாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-12-11 21:24 GMT   |   Update On 2017-12-11 21:24 GMT
காஷ்மீரில் வங்கிக்கு சொந்தமான வாகனம் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 2 காவலாளிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கெல்லர் என்ற இடத்தில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மதியம் அங்கு உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் அந்த வாகனத்தில் இருந்த வங்கியின் காவலாளிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் பாதுகாப்புபடை வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News