செய்திகள்

இறந்ததாக கூறி உயிருடன் இருந்த குழந்தையை பார்சல் செய்து கொடுத்த ஆஸ்பத்திரி: விசாரணைக்கு உத்தரவு

Published On 2017-12-01 21:33 GMT   |   Update On 2017-12-01 21:33 GMT
டெல்லியில், பிறந்த உயிருள்ள குழந்தையை இறந்து விட்டதாக தவறாக அறிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில் மேக்ஸ் ஆஸ்பத்திரி என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 30-ந் தேதி ஒரு குழந்தை இறந்து பிறந்தது. பிறந்த இன்னொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த குழந்தையும் இறந்து விட்டதாக பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அந்த குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்தனர். பெற்றோரும் அந்த குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அப்போது அந்த குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை கண்டு பெற்றோர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் உயிருள்ள குழந்தையை இறந்து விட்டதாக தவறாக அறிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

இதற்கிடையே, “இந்த சம்பவம், மிக அபூர்வமாக நடந்து விட்டது. இதை அறிந்ததும் நாங்கள் அதிர்ந்துபோனோம். இது குறித்து விசாரணை நடத்துகிறோம். சம்பந்தப்பட்ட டாக்டரை விடுமுறையில் அனுப்பிவிட்டோம்” என கூறி மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News