செய்திகள்
சத்தீஸ்கர்: நக்சல்களின் கையெறி குண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தின் சிந்தாகுபா பகுதியில் நக்சல்கள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அங்குள்ள காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சல்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மற்றும் நக்சல்கள் இடையேயான சண்டையில் இருதரப்பினரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ள சிந்தாகுபா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று காலை சுமார் 5:30 மணியளவில் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். கையேறி குண்டுகளை வீசி நக்சல்கள் நடத்திய தாக்குதலில் வெங்கண்ணா என்னும் தலைமை கான்ஸ்டபிள் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த வெங்கண்ணா ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 150-வது பட்டாலியனை சேர்ந்த அவர் சத்தீஸ்கரில் பணியாற்றி வந்தார்.