செய்திகள்

மகாராஷ்டிராவில் டைல்ஸ் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published On 2017-10-21 03:44 GMT   |   Update On 2017-10-21 03:44 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் டைல்ஸ் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சம்பள உயர்வை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமலும் அவதிப்பட்டனர். வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்தனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு வாபஸ் பெறப்பட்டாலும், இன்று காலை வரை போக்குவரத்து சீரடையவில்லை.

இந்நிலையில், சங்லி மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் சிலர் நேற்று இரவு, டைல்ஸ் கொண்டு சென்ற லாரியில் ஏறி வேலைக்குச் சென்றனர். அதிகாலை 3 மணியளவில் அந்த லாரி யோகிவாடி கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், லாரியின் மீது அமர்ந்திருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்ததுடன், அவர்கள் மீது டைல்ஸ்கள் விழுந்து அமுக்கியது. இதில் பலத்த காயமடைந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மிர்சாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News