செய்திகள்

அமித்ஷா மகன் விவகாரம்: ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தலாம் - ஆர்.எஸ்.எஸ்

Published On 2017-10-12 15:09 GMT   |   Update On 2017-10-12 15:09 GMT
அமித்ஷா மகன் ஜெய்ஷா நிறுவனத்தின் லாபம் பல மடங்கு அதிகரித்ததாக எழுந்த புகாரில் உரிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே விசாரணை நடத்தலாம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
போபால்:

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால், 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த தொகையைவிட 16 ஆயிரம் மடங்கு லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என தனியார் இணையதள ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது.

இவ்விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த செய்தியை மறுத்த பா.ஜ.க சம்பந்தப்பட்ட இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட இணையதள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா நேற்று முன் தினம் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், முதன் முறையாக ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் அதில் முறையாக ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தலாம். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ் ஷா தத்ரேத்யா ஹொசபலே தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜெய்ஷா விவகாரத்திலும் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விசாரணை நடத்தலாம் என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News