செய்திகள்

மைசூரு குடகுமலையில் தங்கி இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் சந்திப்பு

Published On 2017-09-22 05:56 GMT   |   Update On 2017-09-22 05:56 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளார் தினகரன் சந்தித்து பேசுகிறார்.

பெங்களூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

அதே நேரத்தில் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எதையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதுவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களுக்கு ஆறுதலாக உள்ளது.

இவர்களில் முன்னாள் அமைச்சர்களான எம்.எல். ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இருவரும் மைசூர் குடகுமலையில் உள்ள விடுதியை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் மட்டுமே அங்கு உள்ளனர்.

இவர்களோடு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் தங்கி உள்ளனர். அவர்களை சந்திக்க அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளார் தினகரன் நேற்றிரவு பெங்களூரு சென்றார்.

இன்று காலை அவர் பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டு குடகுமலை சென்றார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல். ஏ.க்களையும், மற்ற 2 எம்.எல்.ஏக்களையும் சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு அவர் சென்னை திரும்புகிறார்.

இதுகுறித்து அதி.மு.க. அம்மா அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறும்போது, சென்னை ஐகோர்ட்டில் போடப்பட்ட வழக்கு 4-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்தில்தான் தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது என்றார்.

Tags:    

Similar News