செய்திகள்

ஆசிரியர் தண்டித்ததால் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை

Published On 2017-09-21 08:53 GMT   |   Update On 2017-09-21 08:54 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தண்டித்ததால் மனமுடைந்த 5-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள செயின்ட் அண்டனி கான்வண்ட் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நவ்நீத் பிரகாஷ் என்ற சிறுவன் 5-ம் வகுப்பு பயின்று வந்தான்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி நவ்நீத் பள்ளி விட்டு திரும்பி வந்த பிறகு மிகவும் சோகமாக இருந்துள்ளான். சிறிது நேரத்திற்கு பிறகு மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். அவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

அவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில் தன்னை ஆசிரியர் வெகு நேரம் இருக்கை மீது ஏறி நிற்குமாறு தண்டனை அளித்தார். அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். மேலும் தனது கடைசி ஆசையாக, தனது ஆசிரியரிடம் இனிமேல் யாரையும் கடுமையாக தண்டிக்க வேண்டாம் என கூறுங்கள் என எழுதியிருந்தான்.

நவ்நீத்தின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News