தீவிரவாதிகளுக்கு நிதி உதவி: காஷ்மீர்-டெல்லியில் 16 இடங்களில் சோதனை
புதுடெல்லி:
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இதனால் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பவர்களை மத்திய புலனாய்வுக் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக சமீப காலங்களில் டெல்லி, காஷ்மீர் பகுதிகளில் தேசிய புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தியது.
கடந்த மாதம் 17-ந்தேதி ஜம்முவில் தொழில் அதிபர் சகுர்அகமது ஷாவை கைது செய்தது. இவர் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் இன்று 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 11 இடங்களிலும், டெல்லியில் 5 இடங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த பணம் யார் மூலம் செல்கிறது என்பதை கண்டறிய இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை என்.ஐ.ஏ. கைப்பற்றியது.