செய்திகள்

டெல்லி: பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 12-ம் வகுப்பு மாணவன் திடீர் மரணம்

Published On 2017-08-18 08:13 GMT   |   Update On 2017-08-18 08:13 GMT
புதுடெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 12-ம் வகுப்பு மாணவன் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
 
புதுடெல்லி கிஷன்கான்ஜி பகுதியில் உள்ள ரெயில்வே காலனியில் பீகாரைச் சேர்ந்த சோனு குமார் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தான்.

இந்நிலையில், நேற்று சோனு குமார் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற காலை இறைவழிபாட்டின்போது திடீரென மயங்கி விழுந்த அவனை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சோனு குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மாணவனின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சோனுவிற்கு உடல் ரீதியாக எவ்வித பிரச்சனையும் இல்லை. அவன் நலமாக தான் இருந்தான் என சோனு குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மாணவனின் மரணம் குறித்து  புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்த அவர்கள் வெளியிட்ட முதல் கட்ட அறிக்கையில் மாணவன் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News