செய்திகள்

ஜெட்லிக்கு எதிராக கெஜ்ரிவால் கண்டனத்துக்கு உரிய வார்த்தைகளை பயன்படுத்தினார்: ஜெத்மலானி குற்றச்சாட்டு

Published On 2017-07-29 13:07 GMT   |   Update On 2017-07-29 13:07 GMT
மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனத்திற்கு உரிய வார்த்தைகளை பயன்படுத்தினார் என பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாகவும், இதற்கு நஷ்ட ஈடு கோரியும் மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி டெல்லி ஐகோர்ட்டில் இரு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இதில் ஒரு வழக்கில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அவருக்கு அளிக்க வேண்டிய சம்பளத் தொகையை டெல்லி அரசு நிதியில் இருந்து வழங்கியதாக கூறப்பட்டது. அதேபோல் இரண்டாவது வழக்கில் ஆஜரானதற்கான கட்டணத்தை கேட்டுள்ள ராம்ஜெத்மலானி, வழக்கில் இருந்தும் வெளியேற உள்ளதாகவும் கூறியுள்ளார்.



கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், தனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்ததால் அதிருப்தி அடைந்த ராம் ஜெத்மலானி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில், ராம் ஜெத்மலானி கடந்த 20ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை தனது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனத்துக்கு உரிய வார்த்தைகளை பலமுறை பயன்படுத்தியதாகவும், அருண் ஜெட்லிக்கு பாடம் புகட்டும்படி கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல் வழக்குக்கு கட்டணம் கொடுத்து விட்டீர்கள். இரண்டாவது வழக்குக்கு பணம் கொடுக்காமல் என்னால் ஆஜராக முடியாது எனவும் பதிவிட்டுள்ளார் ஜெத்மலானி.
Tags:    

Similar News