செய்திகள்
51 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
கேரளாவில் 51 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோவளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வின்சென்ட் உள்ளார். அவர் மீது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் எம்.எல்.ஏ. வின்சென்ட் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை (வயது 51) விசாரித்த போலீசார், எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள வின்சென்ட், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்மீது இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாகவும், குற்றஞ்சாட்டிய பெண்ணின் சகோதரர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அப்பெண் தற்கொலைக்கு முயன்ற பொழுது அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அவர் வீட்டில் இருந்துள்ளார் என்றும் வின்சென்ட் கூறியுள்ளார்.