செய்திகள்

பிரதமர் மோடிக்கு வினோத பரிசு அனுப்பிய பெண் - பாராட்டி பதில் அனுப்பிய பிரதமர்

Published On 2017-05-23 19:02 GMT   |   Update On 2017-05-23 19:02 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த சிறு விவசாயியான ராமச்சந்திரஜா என்பவரின் மனைவி கீதா தேவி ஒரு வினோத பரிசை அனுப்பினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த சிறு விவசாயியான ராமச்சந்திர ஜா என்பவரின் மனைவி கீதா தேவி (வயது 50) ஒரு வினோத பரிசை அனுப்பினார்.

அந்த பெண் பொழுதுபோக்குக்காக பிளாஸ்டிக் கவர்கள், பாலிதீன் பைகள் போன்ற கழிவுப் பொருட்களில் இருந்து அழகான கூடை, முறம் போன்ற பொருட்களை செய்தார். அவரது வளர்ப்பு மகன் கொடுத்த ஊக்கம் காரணமாக இவ்வாறு செய்த ஒரு கூடையை பிரதமர் மோடிக்கு பரிசாக கடந்த மாதம் பார்சலில் அனுப்பினார்.

பிரதமர் மோடி அந்த பரிசை பெற்றுக்கொண்டதுடன், அவரை பாராட்டி பதில் கடிதமும் அனுப்பினார். அதில், “பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து அழகான பொருட்களை செய்யும் உங்கள் யோசனை அபாரமானது. இது ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பயன்படுவதுடன், சிறு தொழிலில் இதற்கு நல்ல எதிர்காலமும் இருக்கிறது” என்று கூறியிருந்தார். பிரதமரின் பதில் கடிதத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கீதா கூறினார்.

அவரது கணவர் ராமச்சந்திரா கூறும்போது, “கீதா பொழுதுபோக்குக்காகத் தான் இவைகளை செய்தார். விற்பனை செய்வது பற்றி சிந்தித்தது இல்லை. ஆனால் இப்போது பிரதமரே ஊக்கப்படுத்தி இருப்பதை பார்க்கும்போது அதையும் செய்து பார்க்கலாம் என தோன்றுகிறது. ஆனால் அதற்கான பணம் எங்களிடம் இல்லை. வங்கி கடன் கிடைத்தால் அதனை நாங்கள் செய்வோம்” என்றார்.

Tags:    

Similar News