செய்திகள்
மம்தாவின் சீன பயணத்திற்கு அனுமதி மறுப்பா?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சீன பயணத்திற்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் செய்யப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஜூன் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சீனாவின் அழைப்பின் பேரில் மம்தா சீனா செல்ல உள்ளார்.
இதனிடையே, மம்தா பானர்ஜியின் சீன பயணத்திற்கு அனுமதி வழங்குவதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கால தாமதம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் சீன பயணத்திற்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் செய்யப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே கூறுகையில், “அனுமதி கேட்டு எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை வரவில்லை. இதனால் அனுமதி மறுப்பு என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறினார்.
சீன பயணம் குறித்து கடந்த மாதம் மம்தா கூறுகையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்திருந்தது. நான் பலமுறை அழைக்கப்பட்டுள்ளேன். மேற்குவங்கத்தில் முதலீடு செய்ய சீனா ஆர்வத்துடன் உள்ளது. சீனாவில் நாங்கள் ஜூன் மாதத்தில் சில நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம்” என்று தெரிவித்து இருந்தார்.