பெண்கள் பற்றி அவதூறு பேச்சு: கேரள மந்திரி பதவி விலகக்கோரி காங்கிரஸ்-பா.ஜனதா போராட்டம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றலை கண்டித்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான தமிழ் பெண்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்து அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள மின்வாரிய மந்திரி எம்.எம். மணி பேசினார்.
அப்போது அவர், பெண்கள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதற்கு வருத்தம் தெரிவித்து மணி, மன்னிப்பு கேட்கவேண்டும், மேலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மந்திரி மணி மன்னிப்பு கேட்கக்கோரி அவர்கள் காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக திருவனந்தபுரத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல பாரதீய ஜனதா கட்சியும் மந்திரி மணியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை நேற்று கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. மணி, ராஜினாமா செய்ய வேண்டு மென்று காங்கிரஸ் கட்சியினரும் வலியுறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியதாவது:-
இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த மந்திரி மணி பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இயல்பாக கருத்துக்களை கூறி உள்ளார். அது ஊடகங்களில் பெரிதாக சித்தரிக்கப்பட்டு விட்டது. அவர், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் வட்டு குளம் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், கூறி இருப்பதாவது:-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை மந்திரி மணி, அவதூறாக பேசி உள்ளார். இதற்கு முன்பும் அவர், இதுபோல பலமுறை பேசி இருக்கிறார். எனவே அவர் மீது கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.