செய்திகள்

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம்: டெல்லியில் கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்

Published On 2017-04-26 05:37 GMT   |   Update On 2017-04-26 05:37 GMT
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் 2 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் அளித்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் 4 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி குற்றவியல் போலீசார் டிடிவி தினகரனை அதிரடியாக கைது செய்தனர். கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் 2 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது. அப்போது, அவரது வக்கீலின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News