செய்திகள்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டி.டி.வி.தினகரனிடம் 3-வது நாளாக விசாரணை

Published On 2017-04-24 21:00 GMT   |   Update On 2017-04-24 21:00 GMT
இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில் டி.டி.வி.தினகரனிடம் நேற்று 3-வது நாளாக டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில் டி.டி.வி.தினகரனிடம் நேற்று 3-வது நாளாக டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது, தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக கடந்த 17-ந்தேதி கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த டெல்லி போலீசார் அவருக்கு நேரில் சம்மன் வழங்கினார்கள். அதை ஏற்று கடந்த சனிக்கிழமை டெல்லி சென்ற டி.டி.வி.தினகரனை, அன்று சாணக்கியபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீஸ் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரித்தனர். இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனனிடமும், நண்பர் மல்லிகார்ஜூனாவிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

2 நாளாக நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன், ஜனார்த்தனன், மல்லிகார்ஜூனா ஆகிய மூவரையும் ஒரே அறையில் வைத்து உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், துணை கமிஷனர் மதுர் வர்மா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12.50 மணி வரை அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்தனர்.

2 நாள் விசாரணையின் போதும் பெரும்பாலான கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரன் ‘தெரியாது’ என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று 3-வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

இதற்காக ஜனார்த்தனனும், மல்லிகார்ஜூனாவும் பிற்பகல் 2 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்தனர். முதலில் அவர்களிடம் தனியாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் பின்னர், சுகேஷ் சந்திரசேகரையும் அவர்களுடன் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இரவு 7 மணி விசாரணை நடைபெற்றது.

டி.டி.வி.தினகரன் 4 மணிக்கு வந்தார். அவரிடம் இரவு 7 மணிக்கு விசாரணை தொடங்கியது. இணை கமிஷனர் பிரவீண் ரஞ்சித், உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், துணை கமிஷனர் மதுர் வர்மா ஆகியோர் பண பரிமாற்றம், சுகேஷ் சந்திரசேகருடன் உள்ள தொடர்பு பற்றி டி.டி.வி.தினகரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். டி.டி.வி.தினகரனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவரது பதில்களை பெற்றனர். பின்னர் சுகேஷ் சந்திரசேகரையும் அவருடன் வைத்து விசாரணை நடத்தினார்கள். 

Similar News