செய்திகள்

காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு

Published On 2017-04-24 08:52 GMT   |   Update On 2017-04-24 08:52 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குவதாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, ஜம்மு, ஸ்ரீநகர், கன்டேர்பால், பாரமுல்லா, சோபியான் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் விடுதிகள் காலவரம்பற்று மூடப்பட்டன. போராட்டங்கள் தீவிரமடைவதை தடுக்கும் விதமாக இணையதள சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

Similar News